லண்டனில் சாலையில் நடந்து சென்ற 7 வயது சிறுமியை தூக்கி கொண்டு ஓடிய நபர்! பதறியபடி துரத்தி சென்ற தாயார்
லண்டனில் சாலையில் தாயாருடன் நடந்து சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி கொண்டு ஓடிய நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடக்கவுள்ளது.
தெற்கு லண்டனில் தான் இந்த கடத்தல் சம்பவம் கடந்தாண்டு அக்டோபர் 22ஆம் திகதி நடந்தது. அன்றைய தினம் பெண்ணொருவர் தனது 7 வயது மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த டேரன் கொல்லி (37) என்பவர் திடீரென சிறுமியை தூக்கி தனது தோளில் வைத்து கொண்டு ஓடினார். பின்னர் சிறிது தூரம் சென்று சிறுமியை கீழே இறக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியை டேரன் தூக்கி கொண்டு ஓடுவதை பார்த்த அவர் தாய் மகளை மீட்க வேகமாக ஓடிய நிலையில் தான் டேரன் சிறுமியை கீழே இறக்கிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அப்போது வைரலான நிலையில் பொலிசார் டேரனை கைது செய்தனர். ஆனால் தன் மீதான கடத்தல் புகாரை டேரன் மறுத்துள்ளார். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள டேரன் வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.