சுவிஸில் லண்டன் பெண்ணுடன் தமிழருக்கு காதல்! நீண்ட போராட்டத்துக்கு பின் பட்டுசேலை அணிந்து திருமணம்.. புகைப்படங்கள்
லண்டனை சேர்ந்த இளம்பெண்ணை தமிழர் ஒருவர் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரித்தானிய தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அன்னாலுய்சா. தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ரஞ்சித். இவரும், அன்னாலுய்சாவும் சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
அப்போது ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இவர்களது கடல் கடந்த காதல் மலரும் வகையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியதையடுத்து நேற்று கடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக அன்னாலுய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார். அதேபோல் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ரஞ்சித் மணமேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியம் இசைக்க மணமகன் ரஞ்சித் அன்னாலுய்சாவின் கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது அங்கே நின்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அட்சதையை தூவி மணமக்களை வாழ்த்தினர். ரஞ்சித்தும், அன்னாலுய்சாவும் இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துக்காக நீண்ட காலம் காத்திருந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் மிகுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் ரஞ்சித் கூறுகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனத்தில் நானும், அன்னாலுய்சா வும் பணி புரிந்து வந்தோம் அப்போது இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் நாளடைவில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் அவளை கரம் பிடித்துள்ளேன் என கூறினார். மணப்பெண் அன்னாலுய்சா கூறுகையில், நானும் எனது கணவர் ரஞ்சித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
மேலும் எனக்கு இந்திய கலாச்சாரம் என்னை வெகுவாக கவர்ந்து மிகவும் பிடித்தது. மேலும் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை மங்கல வாத்தியம் போன்றவற்றை மூலம் திருமணம் நடைபெற்றது.
ரஞ்சித்தை அதிக அளவில் காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து தமிழ் பாரம்பரியத்தை முழுவதுமாக கற்றுக்கொண்டு புரிதல் ஏற்படுத்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.