லண்டனில் பயங்கர தீ விபத்து: குழந்தைகள் உட்பட 4 பேர் தீயில் கருகி பலி
தென்கிழக்கு லண்டனில் உள்ள வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை இரவு பெக்ஸ்லிஹீத்தில் உள்ள ஹாமில்டன் சாலையில் உள்ள வீட்டில் இந்த பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு பெக்ஸ்லி, எரித், பிளம்ஸ்டெட், லீ கிரீன் மற்றும் சிட்கப் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சுவாசக் கருவியுடன் சென்ற தீயணைப்பு வீரர்கள் 30 அடி ஏணியைப் பயன்படுத்தி முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டனர், ஆனால் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீக்காயங்களுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறியா ஒருவர், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
லண்டன் தீயணைப்பு ஆணையர் ஆண்டி ரோ, இந்த தீ விபத்து உண்மையிலேயே பயங்கரமான சம்பவம், இது வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது என்று கூறினார்.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.