லண்டனில் 29 வயது இளைஞரின் காரை சோதனை செய்த அதிகாரிகள்! சிக்கிய கோடிக்கணக்கான பணம்: நீதிமன்றம் விதித்த தண்டனை
லண்டனில் கடந்த ஆண்டு காரை நிறுத்தி நடத்தப்பட்ட சோதனையில், கைது செய்யப்பட்ட நபருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின், Brent-ல் இருக்கும் Chapter சாலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, Azeem Ahktar என்ற 29 வயது நபர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவர் காரின் உள்ளே போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்று பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.
அவரது வீட்டில், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, போதை பொருட்களுடன் ஷூ பெட்டிகளுக்குள் 220,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 6,15,02,890 கோடி ரூபாய்) மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரி கூறுகையில், வாகன சோதனைக்கு பின், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி மூலம், ஒரு சிலரின் வாழ்க்கையை நாங்கள் காப்பாற்றிருக்கிறோம் என்று நம்புகிறோம். அது தான் உண்மை, இல்லையெனில் ஏதேனும் வன்முறை நடந்தால், கண்டுபிடிக்கப்பட்ட துப்பாகியால் யாரேனும் தாக்கப்படலாம்.
வன்முறையைக் குறைப்பது எங்கள் முன்னுரிமையாக உள்ளது. பொலிஸ் அதிகாரிகள் தினமும் லண்டன் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர். இது போன்ற ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் வன்முறைகள் குறையும் என்று கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட Azeem Ahktar அங்கிருக்கும் ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.