லண்டன் டவர் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு! செங்குத்தாக மாட்டிக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு
லண்டனின் புகழ்பெற்ற அடையாளமான டவர் பாலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திறந்த நிலையில் சிக்கிக்கொண்டுள்ளது.
இதனால் மத்திய லண்டனில் பாலத்தை சுற்றி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தினமும் 40,000 வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பாதசாரிகள் கடந்து செல்லும், இங்கிலாந்தின் பிஸியான இந்த பாலம் பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் Jubilee Trust Tall எனும் கப்பல் தேம்ஸ் நதி வழியாக கடந்து செல்வதற்காக லண்டன் டவர் பாலம் திறக்கப்பட்டது.
அப்போது, மீண்டும் பாலத்தை இணைக்க முயன்ற போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாலத்தின் இருபுறமும் செங்குத்தாக நின்றபடி சிக்கிக்கொண்டது.
இருபுறமும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் 3 மணி நேரங்களுக்கு மேலாக காத்திருகின்றனர். பாலம் மீண்டும் எப்போது இணைக்கப்படும், போக்குவரத்துக்கு திறக்கப்படும் என தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த பாதையை தவிர்க்குமாறு லண்டன் நகர காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
பாலத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக லண்டனின் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. 2020-ல் இதே ஆகஸ்ட் மாதம் இவ்வாறு நடந்தது குறிப்பிடத்தக்கது.