இது கிறிஸ்தவ நாடு! லண்டனில் குர்ஆன் படித்த இஸ்லாமிய இளைஞரிடம் கத்திய நபர்: கமெராவில் பதிவான அதிர்ச்சி காட்சி
லண்டனில் குர்ஆன் படித்த இஸ்லாமிய பயணியை சக பயணி ஆவேசமாக திட்டும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, பயணி ஒருவர் குர்ஆனை படித்ததால், அருகில் இருந்த சக பயணி ஆத்திரமடைந்து அவரிடம், இது ஒரு கிறிஸ்தவ நாடு என்று இனவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த சம்பவம் கடந்த மாதம் 27-ஆம் திகதி காலை உள்ளூர் நேரப்படி 6.40 மணியளவில் Tower Hill அருகே சென்று கொண்டிருந்த போது நடந்துள்ளது.
இந்த பயணத்தில் இருந்த இஸ்லாமிய பயணி ஒருவர் தான் வைத்திருந்த குர்ஆனை படித்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் இருந்த சக பயணி கடும் கோபத்துடன், அவர் மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் இது ஒரு கிறிஸ்தவ நாடு என்று ஆவேசமாக கத்துகிறார். அதன் பின் வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்களும் நீங்கள் செய்வது போன்று இங்கு அமர்ந்து காலை பிரார்த்தனை செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் மற்றவர்களை மதிக்கிறார்கள், ஆனால் உங்களுக்கு அது இல்லை என்று கூறுகிறார்.
உடனே இஸ்லாமிய பயணி, நீங்கள் ஒரு பெரிய மனிதர், உங்கள் வயதிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கிறார். அதன் பின் இந்த விவாதம் நீண்டு கொண்டே செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
இது குறித்து அந்த இஸ்லாமிய பயணி கூறுகையில், கடந்த சனிக்கிழமை காலை நான் வேலைக்கு செல்லும் 6.40 மணி இரயிலில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் காலியாக இருந்தது.
இதையடுத்து ஒரு இடத்தில் அமர்ந்த நான் எனக்கு கேட்கும் அளவிற்கு மென்மையாகவும், அமைதியாகவும் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தேன்(படித்துக் கொண்டிருந்தேன்).
உடனே எனக்கு எதிரே இருந்த பயணி, பொது இடத்தில் குரான் படிப்பதில் எனக்கு பிரச்சனை உள்ளது என்று ஆவேசமடைந்தார்.
அவரைத் தவிர இந்த இரயிலில் இருந்த யாரும் இது குறித்து கவலைப்படவில்லை. ஆனால், அவர் மட்டும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார். நான் அமைதியாக இருந்தேன். அதன் பின்னரே நான் அவமானப்படுத்தப்பட்டதை உணர்ந்தேன்.
அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து எனது அடிப்படை உரிமையை மறுக்க முயன்றார்.
நான் பலமுறை அவரைப் புறக்கணிக்க முயற்சித்தேன். தினமும் காலையில் வேலைக்கு செல்வதற்கு முன் குர்ஆனை படித்து முடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், அதை தான் நான் செய்துவந்தேன்.
ஆனால் அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் கூறியுள்ளனர். ஆனால் மேலதிக அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.