வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.., எந்தெந்த பகுதிகளில் கனமழை?
இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
மேலும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வருகிற 12ஆம் திகதி இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 12ஆம் திகதி வரை தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வருகிற 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கடலூா் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்றும், நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதேசமயம், புயலாக உருவாவதற்கு சாதகமான சூழல்கள் தற்போது வரை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் வருகிற 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |