வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது.
இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும்.
அந்தவகையில், இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.
அதேபோல், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |