"தலைவர் உயிருடன் இருக்கிறார்" பழ.நெடுமாறனின் கூற்றை நிராகரித்த இலங்கை இராணுவம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறனின் கூற்றை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது.
பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சரியான நேரத்தில் பொது வெளியில் தோன்றுவார் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்று கேலிக்கு ஆளானது மற்றும் இலங்கை ஊடகங்களால் கடுமையாக சாடப்பட்டது.
பிரபாகரன், பத்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின் போது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடலை விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கருணா அம்மான் கூட அடையாளம் காட்டினார். அப்போது அவரது உடலின் புகைப்படமும் வெளியானது.
இருப்பினும், விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பது மட்டுமன்றி பொது வெளியிலும் தோன்றுவார் என பழ. நெடுமாறன் கூறுகிறார்.
"உயிருடன் இருக்கிறார்"
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவரின் குடும்பத்தினரும் தம்முடன் தொடர்பில் இருப்பதாகவும், பிரபாகரன் உயிர் பிழைத்தமை குறித்த செய்திகளை அவர்களின் அனுமதியுடன் தான் பகிர்வதாகவும் அவர் கூறினார்.
"பிரபாகரனின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ பதிவுகள் எதையும் இலங்கை வெளியிடவில்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அவரது மனைவி மதிவதனி ஏரம்பு மற்றும் மகள் துவரகாவின் இருப்பிடம் இன்னும் வெளிவரவில்லை," என்று அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலை பிரபாகரன் வெளிப்படுவதற்கு ஏற்றதாக உள்ளது என்றார். சர்வதேச அரசியல் சூழலும், சிங்கள மக்களின் ராஜபக்ச குலத்தின் மீதான எதிர்ப்பும் இதற்குக் காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நிராகரித்த இலங்கை இராணுவம்
எனினும் இந்த கூற்றை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இலங்கை ஊடகப் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் உண்மையில் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான "டிஎன்ஏ சான்றிதழ்கள்" உள்ளிட்ட பதிவுகள் இலங்கை இராணுவத்திடம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கை எந்த நடவடிக்கையும் எடுக்கத் திட்டமிடவில்லை என்றாலும், வெளிவிவகார அமைச்சரிடமிருந்து "எதிர்காலத்தில்" ஒரு அறிக்கை இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.