செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சுவிட்சர்லாந்து வருகை
2012ம் ஆண்டு சைவநெறிக்கூடம் சுவிட்சர்லாந்தில் தமிழ்வழிபாட்டு தீர்மானம் இயற்றி, தமிழர் திருக்கோவில்களில் சென்றது போக செந்தமிழ் திருமறையில் கருவறையில் வழிபாடு நடைபெற வேண்டும்“ எனும் வேண்டுகை முன்வந்தபோது நேரில் வந்து தமிழ்வழிபாட்டிற்கு நல்லாதரவு நல்கியவர் முருகனார் ஆவார்கள்.
இவரிடத்தில் ஈழத்து தமிழர்கள் பலரும் தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி பெற்றிருக்கின்றார்கள். சைவநெறிக்கூடத்தின் தமிழ்வழிபாட்டுகூடத்தினை ஈழத்திலும் முருகனார் ஐயா அவர்கள் கடந்த ஆண்டு திறந்து வைத்திருக்கின்றார். இவர் புகழ்பூத்த கிருபானந்த வாரியார் சுவாமிகளது மருமகன் முறை ஆவார்.
செந்தமிழ் வேள்விச்சதுரர் முருகனார் ஐயாவின் மாணவர்களில் ஒருவரான திருமதி. சாந்தமணி பிறேம் அவர்களின் இல்லத்திருமணவிழாவிற்கு 07.06.2025 சுவிற்சர்லாந்து பேர்ன் நகரிற்கு நேரில்வந்து செந்தமிழ் திருமறையில் திருமண வாழ்வியற்சடங்கினை சைவநெறிக்கூட அருட்சுனையர்களுடன் இணைந்து நடத்திவைத்திருந்தார்.
தமிழ்வழிபாட்டுப் போராளி முருகனார்
திருவாய்த்த ஆசிரியர், முதுமுனைவர் செந்தமிழ்வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார், 11-வது வயதிலேயே வெண்பாக்களைப் பாடும் ஆற்றலைப் பெற்றெடுத்தும், 12,000 தமிழ்ச்செய்யுட்களை மனனம் செய்தும் தமிழுலகை கவர்ந்த சிறுவர் மெய்ம்மையும் ஆவார்.
அத்துடன் மரபுவழிப் பாடல்களை ஆசுகவியாக விரைவில் பாடும் வல்லமை அவருக்குப் பிறவியில் உதித்ததாகும். 11 வயதிலேயே பிங்கலந்தை நிகண்டு முழுவதையும் மனனம் செய்து வாரியார் சுவாமிகள் முன்னிலையில் ஒப்பித்து பரிசும் பெற்றுள்ளார். சந்தமலி செந்தமிழ் எனப் புகழப்படும் திருஞானசம்பந்தரின் பதிகங்களுக்கு உரிய சந்தக்குறிப்புகளை இளம்வயதிலேயே அமைத்தவர். அந்தப் பணி தமிழுலகத்தினரால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு கனவிலே, சிவவேடப் பொலிவுடன் எழுந்தருளிய சிவபெருமான், அப்பர் அருளிய “வடிவேறு திரிசூலம்” தொடங்கும் திருப்பூவணப் பதிகத்தை ஓர் அகங்கவிசந்தத்தில் பாடிக் காட்டியதைக் கேட்ட ஆசிரியர், விழித்த பின்பும் அந்தச் சந்தம் மனதில் நிறைந்திருப்பதை உணர்ந்தார். இதனை மூலமாகக் கொண்டு அந்தப் பதிகத்திற்கு பொருத்தமான பத்தியினை உருவாக்கினார். இப்போது சிவவேள்வி நிகழ்வுகளில் அந்தச் சந்தம் இசையோடு ஒலிக்கிறது.
“எல்லோரும் தேவாரம் பாடலாம்” என்ற இயக்கத்தை ஆரம்பித்து பாமரர்களுக்குச் தேவாரம் பாடும் வாய்ப்பை வழங்கினார். பல வகுப்புகள், பாடநெறிகள் மூலம் திருஞானசம்பந்தரின் வழியிலே திருமுறைகளை சந்தத்துடனும் தாளத்துடனும் பாடக் கற்றுத்தந்தார்.
தமிழ்வழிபாடு
கழுவாய் பிரதோஷ வழிபாட்டுக்கான "உள்ளுறை" என்ற நூலையும் எழுதி, பிரதோஷக்கால வழிபாட்டிற்கு ஏற்ற சந்தத்துடன் தேவாரப் பாடல்களை தொகுத்து இசையூட்டிய ஆல்பமாக வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தேவார இசையை மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் பக்திப்பரப்புரை செய்துள்ளார்.
SRM பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.பொன்னவைக்கோ அவர்களின் ஊக்கத்துடன், ஓதுவார் பயிற்சி பாடத்திட்டங்களை இசை முதல்வர்களுடன் இணைந்து தந்தார். இந்த முயற்சி “திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்” என்ற நூலாக மலர்ந்துள்ளது. இந்நூலில் தமிழிசைச்சங்கக் கருத்தரங்கக் கட்டுரைகள், பண் ஆராய்ச்சி எழுதுக்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் முத்தமிழ் அறிஞர் என்பதை இது உறுதியாக வெளிப்படுத்துகிறது. தமிழா வழிபடு, தமிழில் வழிபடு, தமிழ் வழிப்படு எனும் மகுடத்துடன் தமிழ்வழிபாட்டு கற்கையினை தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஊடாக பட்டயப்படிப்பாக அளித்துவருகிறார்.
“தமிழிசையே தரணியின் முதலிசை”
இடைச்சங்ககாலத்தின் 'பஞ்ச மரபு' தமிழிசை நூலை ஆய்ந்து அதன் செய்திகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அண்ணாமலை மன்ற தமிழிசைச் சங்கத்தின் 64வது ஆண்டு பண் ஆராய்ச்சிக் கூட்டத்தில் பங்கேற்று பண்ணாய்வுரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்தாய் வாழ்த்து – இசை
“தமிழ்த்தாய் வணக்கம்” மற்றும் “முத்தாய்ப்பு முத்தமிழ்ப்பண்” ஆகிய சந்தப்பாடல்களை இயற்றியும், இசையமைத்து வெளியிட்டும் தமிழ் உணர்வை இசையின் வழியே மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார். அண்மையில் நடந்த திருமந்திர விழாவில் “சைவ வைணவ போற்றி நூற்றிரட்டு” என்ற வழிபாட்டு நூலையும் வெளியிட்டார்.
மலேசியாவில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில், சம்பந்தரின் “கோளறு” பதிகம் முழுவதையும் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு இராகங்களில் பாடியமை இசைமேதைகளை வியப்பில் ஆழ்த்தியது.
தமிழர்கள் திருக்கோவில்களில் கருவறையில் தமிழ் ஒலிக்க உழைக்கும் அறவழிப்போராளி, இசையிலும் இலக்கியத்திலும் கலையிலும் பொலிவூட்டும் தமிழறிஞர் – செந்தமிழ்வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்தாய் வாழ்த்து பெறும் அளவுக்கு உயர்ந்தது. இவரது சுவிட்சர்லாந்து வருகை தமிழ் அருட்சுனையர்களுக்கு ஊக்கமாக அமைந்திருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |