திடீரென ஜேர்மன் தேவாலயம் ஒன்றின் முன் குவிக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி
ஜேர்மன் தேவாலயம் ஒன்றின் முன் திடீரென இயந்திரத் துப்பாக்கிகளுடன் பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மாலை, உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஜேர்மனியிலுள்ள Hagen நகரிலுள்ள ஒரு யூத தேவாலயம் முன்பு திடீரென ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று யூதர்களின் முக்கிய பண்டிகை ஒன்று கொண்டாடப்பட்ட நிலையில், அவர்கள் தேவாலயங்களில் இரவு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக கூடியிருந்தார்கள். அங்கு தாக்குதல் நடக்கலாம் என தங்களுக்கு இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிசார் குவிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக பொலிசார் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால், தேவாலயத்துக்கு என்ன அச்சுறுத்தல், யாரால் அச்சுறுத்தல் என்பது போன்ற விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
2019ஆம் ஆண்டு, Halle என்ற நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றின் மீது வலது சாரி தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். அந்த தாக்குதலின்போது இருவர் கொல்லப்பட்டார்கள்.
அப்போது, பொலிசார் அந்த நபரை கைது செய்தாலும், அவர்கள் விரைவாக செயல்படவில்லை என பொலிசார் மீது ஒரு விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஏதாவது நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே இம்முறை பொலிசார் முன்கூட்டியே இந்த தேவாலயத்தின் முன் குவிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.