அமெரிக்காவிற்கு நேர்மாறாக பிரான்ஸ்., உலகளாவிய ஆய்வாளர்களை பிரான்சுக்கு அழைக்கும் மேக்ரான்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உலகளாவிய ஆய்வாளர்களை பிரான்சுக்கு வரவேற்பதாக அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நிதி வெட்டுகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உலகளாவிய ஆய்வாளர்களை ஐரோப்பாவில் பணியாற்ற வருமாறு அழைத்துள்ளார்.
"பிரான்ஸில், ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது; புதுமை ஒரு கலாசாரம்; அறிவியல் ஒரு எல்லையற்ற வானம். உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களே, பிரான்ஸைத் தேர்ந்தெடுக்குங்கள், ஐரோப்பாவைத் தேர்ந்தெடுக்குங்கள்!" என மக்ரோன் தனது X பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, “Choose France for Science” என்ற புதிய தளத்தை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் French National Research Agency (ANR) உடன் இணைந்து, உலகின் ஏதேனும் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை வரவேற்க விரும்பும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை, அரசிடம் நிதி ஒதுக்கீடு கோரலாம்.
முக்கியமாக, சுகாதார ஆராய்ச்சி, காலநிலை மாற்றம், பல்வேறு உயிரின பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வுகள், பசுமை எரிசக்தி, மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பெரிதும் வரவேற்கப்படுவர்.
Aix Marseille University தனது "Safe Place for Science" திட்டத்தின் மூலம் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து வரும் விஞ்ஞானிகளுக்கு பணிவாய்ப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு விண்ணப்பங்கள் ஏற்கனவே வந்துள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, அறிவியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பிரான்ஸ் அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |