கிரீன்லாந்தை வாங்கப்போவதாக மிரட்டும் ட்ரம்ப்: மேக்ரான் எடுக்கவிருக்கும் நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டுவதுடன், கிரீன்லாந்து நாட்டையும் வாங்கப்போவதாக கூறிக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், கிரீன்லாந்துக்கு ஆதரவாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஒரு விடயத்தைச் செய்ய இருக்கிறார்.
மேக்ரான் எடுக்கவிருக்கும் நடவடிக்கை
கிரீன்லாந்து தாது வளம் மிகுந்த ஒரு நாடாகும். உக்ரைனிலுள்ள தாதுக்கள் மீது கண் வைத்துள்ளதுபோல, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிரீன்லாந்தின் தாதுக்கள் மீதும் கண் வைத்துள்ளார்.
ஆகவே, கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக நீண்ட காலமாக கூறிவருகிறார் ட்ரம்ப்.
ட்ரம்பின் மிரட்டல்களைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்ட விரும்புகிறது கிரீன்லாந்து.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், கிரீன்லாந்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கிரீன்லாந்துக்கு பயணிக்க இருக்கிறார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி, மேக்ரான் கிரீன்லாந்துக்குச் செல்ல இருக்கிறார்.
தனது கிரீன்லாந்து பயணத்தின்போது கிரீன்லாந்து பிரதமரான ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்செனையும், டென்மார்க் பிரதமரான மெற் பிரெட்ரிக்சனையும் சந்திக்க இருக்கிறார் மேக்ரான்.
பிரெட்ரிக்சன், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு இடையில், மேக்ரானின் வருகை, ஐரோப்பிய ஒற்றுமையின் மற்றொரு உறுதியான ஆதாரமாகும் என்று கூறியுள்ளார்.
மார்ச் மாதம் கிரீன்லாந்துக்கு வருகை புரிந்த அமெரிக்க துணை ஜனாதிபதியான ஜே.டி.வேன்ஸ், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வற்புறுத்தியதுடன், டென்மார்க்கின் பாதுகாப்பின் கீழ் இருப்பதைவிட, அமெரிக்காவின் பாதுகாப்பின்கீழ் இருப்பது கிரீன்லாந்துக்கு கூடுதல் நன்மையைக் கொடுக்கும் என்று கூறியிருந்தார்.
வேன்ஸின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்த பிரெட்ரிக்சன், நீங்கள் இன்னொரு நாட்டை உங்கள் நாட்டுடன் இணைக்கமுடியாது, சர்வதேச பாதுகாப்பு என்ற வாதத்தை முன்வைத்தாலும், நீங்கள் இன்னொரு நாட்டை உங்கள் நாட்டுடன் இணைக்கமுடியாது என்று கூறினார்.
கிரீன்லாந்து, டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு தன்னாட்சி நிர்வாகப் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |