இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்; வரதட்சணை வாங்க தடை - எங்கே தெரியுமா?
பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாதி ஒரு சமூகப்படிநிலை ஆகும். இன்றைய AI காலத்திலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாதி அடிப்படையில் தீண்டாமை நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்
இந்நிலையில் இந்தியாவில் ஒரு கிராமம் சாதியற்ற நிலையை உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சவுண்டலா கிராமத்தில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பாகுபாடு, தீண்டாமை மற்றும் சமூக அநீதியை ஒழிப்பதற்காக "சாதியற்றது" என்று அறிவிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

அரசு சேவைகள், நீர் ஆதாரங்கள், கோவில்கள், தகன மைதானங்கள், பள்ளிகள் மற்றும் சமூக விழாக்கள் உட்பட அனைத்து பொது இடங்களும், வசதிகளும் பாகுபாடு இல்லாமல் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் திறந்திருக்கும்" என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "கிராம மக்கள் அனைவரும் 'எனது சாதி - மனிதன்' என்ற உணர்வை ஏற்றுக்கொள்ள கூட்டாகத் தீர்மானித்தனர்.
தீண்டாமை, சமூக புறக்கணிப்பு அல்லது சமூக அநீதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் எந்தவொரு கிராமவாசியும் பதிவிடவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது என்றும், யாரேனும் இதை மீறினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமசபை தீர்மானித்துள்ளது.
இது குறித்து பேசிய பஞ்சாயத்து தலைவர் அர்கடே, "சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், சமூகப் பிளவுகளைக் குறைக்கவும், மற்ற கிராமங்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாக அமையவும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிராமப்புறங்களில் சாதி பாகுபாட்டின் விஷம் ஆழமாக உள்ளது, இது எங்கள் கிராமத்தை அடையக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். சாதி பிரச்சினை குறித்த சமூக ஊடக பதிவுகள் கூட ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பெறப்படும் புகார்கள் அல்லது தானாக முன்வந்து கூட நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
வரதட்சணை வாங்க தடை
முன்னதாக இந்த கிராமத்தில் வரதட்சணை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வரதட்சணை கேட்டு ஒரு பெண் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் கிராம பஞ்சாயத்துக்கு யாராவது தகவல் தெரிவித்தால், அவருக்கு ரூ.2100 வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், கணவர் இறந்த பிறகு பெண்கள் குங்குமத்தை அழிப்பது,தாலியை கழற்றுவது, வளையல்களை உடைப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தகாத அவதூறு வார்த்தையை பேசுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கிறது.
2008 ஆம் ஆண்டில் சர்ச்சை கிராமம் என்பதற்கான மாநில அளவிலான விருதை சவுண்டலா கிராமம் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |