பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது...
பிரித்தானிய அரசியலில், சில மாதங்களாகவே புயல் ஒன்று ஆளுங்கட்சிக்குள் புகைந்துகொண்டிருப்பது குறித்த விடயம் அனைவரும் அறிந்ததே!
ஆம், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து அகற்ற பலரும் பல விதங்களில் மறைமுகமாக செயல்பட்டுவரும் நிலையில், சிலர் நேரடியாகவே அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளார்கள்.
அவர்களில் முக்கியமானவர் ஆன்டி பர்னாம். ஆனால், ஆன்டி பர்னாம் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவர் கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவருகிறார்.

ஆகவே, அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவேண்டுமானால், முதலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக இங்கிலாந்திலுள்ள மேக்கர்ஃபீல்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஷ் சைமன்ஸ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய, அங்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆன்டி, மேக்கர்ஃபீல்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
ஆக, இன்று நடைபெறும் மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலில் ஆன்டி வெற்றி பெறும் பட்சத்தில், அவர் பிரதமர் ஸ்டார்மருக்கு நேருக்கு நேர் சவால் விடமுடியும்.
அவருக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், அவர் பிரித்தானிய பிரதமர் ஆகவும் வாய்ப்புள்ளது.
விடயம் என்னவென்றால், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் ஆன்டியை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி, நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி.
அக்கட்சியினர் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என போராடிவரும் நிலையில், வெற்றி யாருக்கு, ஆன்டி வெற்றி பெறுவாரா, பிரித்தானியாவின் புதிய பிரதமராவாரா என்பதையெல்லாம் அறிந்துகொள்ள நாம் நாளை வரை பொறுத்திருக்கவேண்டும்.
ஏனென்றால், நாளைதான் மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |