கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி
கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் மம்தானி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி
பிரித்தானிய மன்னர் சார்லஸ், ராணி கமீலாவுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று, செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றிருந்தனர்.

அப்போது மன்னர் சார்லஸ் உடன் நியூயார்க் நகர மேயர் மம்தானி உரையாடிக்கொண்டிருந்தார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில், மன்னருடன் தனிப்பட்ட முறையில் பேச வாய்ப்பு கிடைத்தால் என கேட்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இந்தியாவிற்கு சொந்தமான கோகினூர் வைரத்தை திரும்ப இந்தியாவிடம் வழங்க வேண்டும்" என மம்தானி தெரிவித்தார்.
கோகினூர் வைரம்
கோகினூர் வைரமானது இந்தியாவின் தெலங்கானா மாநிலம், கொல்லூர் சுரங்கத்தில் 13 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
105.6 காரட் எடை கொண்ட இந்த வைரம், 200 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புள்ளதாக கருதப்படுகிறது.

முகலாய மன்னர்கள் உட்பட பல்வேறு ஆட்சியாளர்களிடமிருந்த அந்த வைரம், கடைசியாக சீக்கியப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மகாராஜா துலீப் சிங்கின் கைக்கு வந்தது.
1849-ல் பிரித்தானியர்கள் பஞ்சாபை இணைத்தபோது, அவர் சுமார் 10 வயது சிறுவனாகவே இருந்தார். அதன் பின்னர் அந்த வைரம் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது.
பிரித்தானிய மஹாராணிகளின் கிரீடங்களில் இருந்த அந்த வைரம், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு, லண்டன் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அரச ஆபரணங்களின் ஒரு பகுதியாகவே உள்ளது.

இந்த வைரத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. தற்போது இந்திய வம்சாவளியான மம்தானியும் இதனை இந்தியாவிடம் ஒப்படைக்க குரல் கொடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |