லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கோடரியுடன் சிக்கிய மர்ம நபர்
லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகம் அருகே கோடரியுடன் மர்ம நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்கான முக்கிய பாதையில் வழக்கம் போல பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை சுமார் 18.30 மணி அளவில் அவர்கள் கோடரி ஏந்தியிருக்கும் ஒருவரைக் கண்டார்கள்.
இதனையடுத்து, அந்த நபரை சுற்றி வளைத்த ஆயுதம் ஏந்திய பொலிசார், அந்த நபரை உடனடியாக கைது செய்துள்ளனர். சம்பவத்தின் போது, ஏதும் வன்முறை நடந்ததா என்பது தொடர்பில் தகவல் இல்லை.
கைதான நபருக்கு 40 வயதிருக்கும் எனவும், தற்போது அவர் விசாரணைக்காக சாரிங் கிராஸ் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடரியுடன் மர்ம நபர் கைதாகியுள்ள பாதையானது, டிராஃபல்கர் சதுக்கத்தின் தென்மேற்கு மூலையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை வரை நீண்டதாகும்.
மட்டுமின்றி அந்த நபர் கைதாகியுள்ள பகுதியானது அரண்மனை வாயிலில் இருந்து சுமார் 800 மீற்றர் தொலைவு மட்டுமேயாகும்.
இளவரசர் பிலிப் காலமானதைத் தொடர்ந்து ராணியார் வின்ட்சர் கோட்டையில் தங்கியிருப்பதால் தற்போது பக்கிங்ஹாம் அரண்மனையில் முக்கிய அரச குடும்பத்து உறுப்பினர்கள் யாரும் இல்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை இளவரசர் பிலிப் காலமான தகவல் வெளியான பின்னர், திரளான மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் திரண்டு, அஞ்சலி செலுத்தி வந்தனர்.
தற்போது கோசரியுடன் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில், பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.