மனைவி, மகள், தாய் என குடும்பத்தையே கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர்! வீட்டில் எழுதி வைத்திருந்த கண்ணீர் கடிதம்
தமிழகத்தில் மனைவி, மகள் மற்றும் தாய் என மூவரையும் கொன்றுவிட்டு நகை வியபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி சொர்ணபூமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதி மோகன்(41)-ரம்யா(33), இந்த தம்பதிக்கு 10 வயதில் அன்மயா என்ற மகள் உள்ளார்.
இவர்களுடன் மோகனின் தாய் 61 வயது மதிக்கத்தக்க வசந்தம்மாளும் வசித்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் வசித்து வந்த வீட்டை, வீட்டின் உரிமையாளர் வேறொருவருக்கு விற்றுவிட்டதால், வீட்டை காலி செய்யும் படி கூறியுள்ளார். அதன் படி மோகனுக்கு கடந்த வெள்ளிக் கிழமை தான் கடைசி நாளாக கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை வரை மோகன் வீட்டைக் காலி செய்யாத நிலையிலும், வெள்ளிக்கிழமை காலையிலும் வெகுநேரமாக வீடு திறக்கப்படாத நிலையிலும் இருந்ததால், அந்த வீட்டை வாங்கிய புதிய உரிமையாளர் உள்ளே பார்த்த போது, வீட்டினுள் மின்விசிறி, டிவி ஆகியவை ஓடிக் கொண்டிருந்துள்ளது.
சந்தேகமடைந்த அவர், தங்களிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது மோகன் உள்ளிட்ட நான்கு பேரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதில், மோகனின் முகத்தில் மட்டும் பிளாஸ்டிக் கவர் இறுக்கமாக சுற்றப்பட்டிருந்தது. இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடல்களை மீட்டு, அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நிலையில், கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில் மோகன், தான் ஆன்லைனில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக வெளியிலும் வங்கியிலும் கடன் வாங்கி முதலீடு செய்ததாகவும், பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் சுமை அதிகரித்ததாகவும், வெளியில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்ததாகவும், அதனால் வேறு வழியின்றி தற்கொலை முடிவு எடுத்ததாகவும், தங்கள் முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்துள்ளார்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் மோகனே விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அதன் பின்னர், மோகனும் விஷம் அருந்தியுள்ளார்.
இதில் தான் உயிர்பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக, முகத்தில் பிளாஸ்டிக் கவரை இறுக்கமாக சுற்றிக் கொண்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் இதைப் பற்றிய முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.