குழம்பு சமைத்து சாப்பிட்டவர் சுருண்டு விழுந்து மரணம்: ஜேர்மனியில் சம்பவம்
ஜேர்மனியின் முனிச் நகரில் தாமே குழம்பு சமைத்து சாப்பிட்டவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் மரணமடைந்துள்ளார்.
முனிச் பகுதியை சேர்ந்த 48 வயது நபரே, தாம் சமைத்த குழம்பு உணவை சாப்பிட்டு மரணமடைந்துள்ளார். ஏப்ரல் மாத இறுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் முனிச் பொலிசார் செவ்வாயன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஜேர்மனியில் பிரபலமான காட்டு காய்கறிகளால் அவர் குழம்பு சமைத்த நிலையில், காட்டு பூண்டு என கருதி, நச்சுத்தன்மை மிகுந்த காய் ஒன்றை அவர் குழம்பில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
பூண்டு போலவே இருக்கும் அந்த காய் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டது என்பது மட்டுமல்ல, சிறிய அளவில் கூட மனிதர்களுக்கு ஆபத்தானது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாம் சமைத்த குழம்பில் சிறிதளவு சாப்பிட்டவருக்கு ஏதோ தவறு நடந்ததாக தெரியவர உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர், அவரை மீட்டு முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் அவர் சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், இதேப்போன்று ஜேர்மனியில் இன்னொருவர் குழம்பு சமைத்து சாப்பிட்டதில், அவரும் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.
உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்து பலமுறை இது தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.