அமெரிக்காவில் மாயமான இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு: காதலர் தப்பியோட்டம்
இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் அவரது காதலர் தலைமறைவாகிவிட்டார்.
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமான நிலையில், அவரது முன்னாள் காதலரான அர்ஜூன் ஷர்மா, ஜனவரி மாதம் 2ஆம் திகதி, நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.

நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள். அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், நிகிதாவைக் காணவில்லை என புகாரளித்த அர்ஜூன் தலைமறைவாகிவிட்டார். அர்ஜூன் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

ஆகவே, அர்ஜூனைக் கைது செய்ய, இண்டர்போல் செயல்படும் இந்தியா உட்பட்ட 200 நாடுகளுக்கு சிவப்பு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
காணாமல் போனதாக கூறப்பட்ட நிகிதா சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம், அவரது நண்பர்கள் குடும்பத்தினரிடையே கோபத்தையும் சோகத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |