கொலை வழக்கில் சிறை சென்ற நபர்..ஏழு ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த காதலி..அம்பலமான உண்மை
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நபர், கணவருடன் வாழ்ந்து வரும் காதலியை அடையாளம் காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு ஆண்டுகள் சிறை
ராஜஸ்தான் மாநிலம் ரசீத்பூரைச் சேர்ந்தவர் சோனு சைனி. இவர் கடந்த 2015ஆம் தனது காதலி ஆரத்தியை கொலை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண்ணின் பெற்றோர் சோனு தங்கள் மகளை திருமணம் செய்து கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் ஆகியோர் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.
காதலியை அடையாளம் கண்ட சோனு
இந்த நிலையில், சோனு சைனி மற்றும் கோபால் சிங் இருவரும் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தனர். ஆரத்தி உயிருடன் தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க இருவரும் அவரை தேடத் தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தின் விஷாலா கிராமத்தில் ஆரத்தி வசிப்பதாக தகவல் அறிந்த சோனு, அங்கு சென்று அவரை அடையாளம் கண்டுகொண்டார்.
உண்மையை நிரூபிக்க போராட்டம்
அதனைத் தொடர்ந்து மெகந்திப்பூர் காவல் நிலையத்தில் அடையாளம் வேண்டும் என்று சோனு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உதவ மறுத்துவிட்டதால், இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்கு சோனு அடையாள அட்டையை கைப்பற்றியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் விசாரணையில் இறங்கியதாக சோனு கூறியுள்ளார்.
மெகந்திப்பூர் பொலிஸார் அளித்த தகவலை தொடர்ந்து, உத்தர பிரதேச பொலிஸார் ஆரத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில், அப்பெண் தனது கணவர் பகவான் சிங் ரேபாரி என்பவருடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
மேலும், ஆரத்தியின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, கொலை வழக்கு போலியாக பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக இத்தனை ஆண்டுகளாக தனது பெற்றோருடன் ஆரத்தி தொடர்பில் இருந்துள்ளார். அத்துடன் சோனு, கோபால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதை ஆரத்தி அறிந்து வைத்துள்ளார்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆரத்தி
இந்த நிலையில் ஆரத்தி மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சோனு கைது செய்யப்பட்டதால் அவரது தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்தார். அவர் இந்த வழக்கிற்காக 20 லட்சம் வரை செலவிட்டு, கடனாளியானதாக வேதனை தெரிவித்துள்ளார்.