கார் குறுக்கே வந்த கோபத்தில் மோசமான சைகை காட்டியதால் மகனை இழந்த பெண்: குற்றவாளிகள் இவர்கள்தான்
அமெரிக்காவில் சாலையில் பயணிக்கும்போது திடீரென குறுக்கே வந்த காரின் சாரதியைப் பார்த்து, கோபத்தில் ஆபாச சைகை காட்டினார் ஒரு பெண். உடனே அந்த காரிலிருந்த ஒருவர் சட்டென தனது துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் காரை நோக்கி சுட்டிருக்கிறார்.
காரின் பின் இருக்கையில் அந்த பெண்ணின் மகன் அமர்ந்திருக்க, காரைத் துளைத்துக்கொண்டு பாய்ந்த குண்டு அந்த சிறுவனின் மீது பாய்ந்திருக்கிறது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Aiden Leos என்னும் அந்த ஆறு வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனான். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் Volkswagen Golf SportWagen கார் ஒன்றைத் தேடி வந்தார்கள்.
அது அபூர்வவகை கார் என்பதால், பொதுமக்கள் பலர் அது குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்கள். அந்த காருக்கு சொந்தக்காரரான Marcus Eriz (24) என்பவரிடம், அவரது காரைப்போன்ற ஒரு காரை பொலிசார் தேடிவருவதாக அவரது சக பணியாளர்கள் கூற, உடனே அந்த காரை உறவினர் ஒருவர் வீட்டில் மறைத்துவைத்த Marcus, தாடியை மழித்துக்கொண்டு, ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டு வேறொரு ட்ரக்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். என்றாலும், இம்மாதம் (ஜூன்) 6ஆம் திகதி Marcus தனது காதலியான Wynne Lee (23) என்ற பெண்ணுடன் சிக்கினார்.
பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர். Marcus மீது கொலைக்குற்றச்சாட்டும், Lee மீது குற்றத்திற்கு உதவியது மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.