எனது குடும்பம்... பிரித்தானியாவில் பறவைக் காய்ச்சலால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட நபர் உருக்கம்
பறவைக் காய்ச்சலின் ஆபத்தான தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் பிரித்தானியரின் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தெவோன் பகுதியில் வசிக்கும் 79 வயதான Alan Gosling என்பவருக்கே நாட்டிலியே முதன்முறையாக பறவைக்காய்ச்சல் தொற்று பாதித்துள்ளது.
இவரது குடியிருப்பில் வளர்க்கப்பட்ட 160 வாத்துகள் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட, தற்போது மொத்தமாக கொல்லப்பட்டுள்ளது. தமது குடும்ப உறுப்பினர்களை இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறும் அவர், நடந்தவற்றை ஏற்கும் மன நிலைக்கு வரவே தம்மால் முடியவில்லை என்கிறார்.
மட்டுமின்றி, தமது குடியிருப்புக்குள் வளர்க்கப்பட்ட 20 வாத்துகளும் பாதுகாப்பு கருதி கொல்லப்பட்டுள்ள சம்பவம் இதயம் நொறுங்கும் செயல் என அவர் கூறுகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக அவர்களுடன் தான் எனது வாழ்க்கை. அதனாலையே இந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை என்றார். எனது குடும்பம் அவர்கள், எனது வாழ்க்கை, என்னை நன்கு புரிந்து கொண்டவர்கள் என்பது வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு புரியாது என அவர் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
அந்தப் பறவைகளுடன் வாழ்ந்து வந்ததால் நான் இதுவரை தனிமையை உணர்ந்ததில்லை, ஆனால் இப்போது ஒரு பிணவறை போல இருக்கிறது எனது வீடு என கண்கலங்கியுள்ளார் அவர்.
பிரித்தானியாவில் H5N1 தொற்றால் பாதிக்கப்படும் முதல் நபர் இந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். 1990களுக்கு பிறகு பறவைக்காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்ட பின்னர் உலகெங்கும் இதுவரை சுமார் 1000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தும் உள்ளனர். பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது என்பது அரிதிலும் அரிது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.