தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை கொன்ற தந்தை - இந்தியாவில் கொடூரம்
தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 வயது மகளின் உயிரை தந்தை பறித்த கொடூர சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 5ஆம் திகதி ஜில்லா பரிஷத் தேர்தல் நடைபெற உள்ளது. 2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ளோர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில், முகேத் தாலுகாவில் வசிக்கும் பாண்டுரங் கோண்ட்மங்கலே(Pandurang Kondmangale) என்பவர் முடிதிருத்தும் நிலையம் நடத்தி வருகிறார்.
இவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வம் இருந்தாலும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளதால் விதிப்படி இவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
இது குறித்து அவரது நண்பரான தற்போது பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ராமச்சந்திர ஷிண்டேயிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஒரு பெண் குழந்தையை தத்து கொடுத்து விடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரில் பாண்டுரங் பெயர் இருக்கும் என்பதால் இதனை கைவிட்டனர்.
அதன் பின்னர் குழந்தையை மறைத்து வைக்கலாம் என திட்டமிட்டனர். ஆனால் குழந்தை வெளியே வந்தால் சிக்கலாகி விடும் என கருதி குழந்தையை கொன்று விட்டு விபத்து போல் காட்ட திட்டமிட்டனர்.
6 வயது மகள்
அண்டை மாநிலமான தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்திற்கு தனது 6 வயது மகளை அழைத்து சென்று கால்வாயில் வீசி வந்துவிட்டார்.
அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் தண்ணீரில் ஏதோ விழும் சத்தம் கேட்டு அங்கு விரைந்தனர். கால்வாயில் குழந்தை சடலமாக மிதப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
குழந்தை யார் என்பதை கண்டறிய குழந்தையின் புகைப்படத்தை காவல்துறையினர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர். மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர், இது பாண்டுரங்கின் மகள் பிராச்சி(Prachi) என காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் பாண்டுரங்கிடம் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதன் பின்னர் தேர்தலில் போட்டியிடுவதற்காக குழந்தையை கொலை செய்ததை பாண்டுரங் ஒப்புக்கொண்டார். இதில் அவருக்கு உடந்தையாகஇருந்த பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திர ஷிண்டேவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |