பாம்பை ஏவி தன்னை போலவே தோற்றம் கொண்டவரை கொன்ற சமையல்காரர்! கோடிக்கணக்கான பணத்துக்காக நடந்த நாடகம் அம்பலம்
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் கோடிக்கணக்கான ரூபாய் காப்பீட்டு தொகையைப் பெறுவதற்காக, தன்னை போலவே தோற்றம் கொண்ட ஆதரவற்ற நபரை பாம்பைப் பயன்படுத்திக் கொன்று, தான் இறந்துவிட்டது போல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாகர் பீமாஜி வாக்சௌரே (54) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வந்த நிலையில் சமையல்காரராக பணியாற்றினார்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராஜூர் கிராமத்தில் இருந்துள்ளார் இந்நிலையில், பீமாஜி இறந்துவிட்டதாக, அரசு மருத்துவமனையிலிருந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குக் காவல் துறையினர் சென்றனர். அப்போது, அங்கு வந்த அவரது உறவினர் பிரவீனும், அப்பகுதியை சேர்ந்த ஹர்சத் என்பவரும், இது பீமாஜி தான் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், உடற்கூராய்வில் பாம்பு கடி காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரியவந்ததால் இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் பிரவீனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பீமாஜி இறப்பு குறித்து, அவர் காப்பீடு திட்டம் எடுத்திருந்த அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, நிறுவனத்தின் ஊழியர் விசாரிப்பதற்காக மகாராஷ்டிராவுக்கு வந்துள்ளார்.
அப்போது, காவல் துறையினரிடம் இறப்பு குறித்து கூடுதல் தகவல்கள் தேவை என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பீமாஜி வசித்த பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர். ஆனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவமே தெரியவில்லை.
ஆனால், அன்றைய தினம் ஆம்புலன்ஸ் வந்ததை பார்த்த்தாக தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த காவல் துறையினர், பீமாஜியின் தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், அவர் இறக்கவில்லை என்றும், மருத்துவமனைக்கு பிரவின் என்ற பெயரில் வந்தவர் தான் பீமாஜி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, களத்தில் இறங்கிய பொலிசார் உடனடியாக நாடகம் ஆடிய கும்பலை கைது செய்தனர். இதுகுறித்து பேசிய பொலிசார் ஏற்கனவே 2017இல் மனைவி இறந்துவிட்டதாகக் காப்பீடு நிறுவனத்தில் பணம் கோரி பீமாஜி மோசடியில் ஈடுபட்டிருந்ததால், அவரது மரண வழக்கை நிறுவனத்தின் ஊழியர்கள் தீவிரமாக ஆராய்ந்தனர்.
பீமாஜி தனது கூட்டாளிகளுடன் இணைந்து காப்பீடு தொகை 5 மில்லியன் டொலர்களை பெறுவதற்காகச் சொந்த மரண நாடகத்தை நிகழ்த்தியுள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் அனப் என்பவரை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, பாம்பு பிடிப்பவரை வரவைத்து, அவரிடமிருந்த கோப்ரா பாம்பு மூலம் அனப்பை கடிக்க வைத்து கொன்றுள்ளனர். அடுத்து, அந்த சடலத்தை பீமாஜி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பின், ஆம்புலன்ஸ் வரவழைத்து, பாம்பு கடித்துவிட்டதாக பிரவின் போல் நாடகத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இதற்காக கூட்டாளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. தற்போது பீமாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை கைது செய்துள்ளோம்.
பாம்பை எடுத்து வந்த நபரை தேடி வருகிறோம், சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகும் என கூறியுள்ளனர்.