துயரத்தில் முடிந்த வாக்குவாதம்... லண்டனில் இந்திய இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்
லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்கான இந்திய இளைஞர் மரணமடைந்த வழக்கில், தற்போது நபர் ஒருவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மார்பில் குத்தப்பட்ட நிலையில்
கடந்த 2022 அக்டோபர் மாதம் 24 வயதேயான இந்திய இளைஞர் Arpith Mandava மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், Denis Ivanov என்பவர் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதே வழக்கில் சிக்கிய Denis Kusins என்பவர் மீதும், பொதுவெளியில் ஆயுதங்களை பயன்படுத்தியது, தாக்குதலை முன்னெடுத்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அக்டோபர் 14ம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் Arpith Mandava மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டார். ஆனால் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி, அக்டோபர் 27ம் திகதி அவர் மரணமடைந்தார்.
இந்த நிலையில் தீவிர விசாரணையை முன்னெடுத்த அதிகாரிகள், 71 கண்காணிப்பு கமெரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், Arpith Mandava மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மது வாங்கும் பொருட்டு சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளதை உறுதி செய்தனர்.
பாரிஸ் நகருக்கு தப்பியுள்ளார்.
மது போத்தல்களுடன் திரும்பிய நண்பர்கள் குழுவை, இன்னொரு குழு எதிர்கொண்டதுடன், அவர்களிடம் இருந்து மது போத்தல்களை கைப்பற்றவும் முயன்றுள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் Arpith Mandava மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.
ஆனால் Ivanov மற்றும் Kusins ஆகிய இருவரும் கத்தியுடன் துரத்தி சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அக்டோபர் 16ம் திகதி Ivanov ரயிலில் பாரிஸ் நகருக்கு தப்பியுள்ளார்.
ஆனால் பிரான்ஸ் பொலிசார் உதவியுடன் அவர் கைது செய்யப்பட அக்டோபர் 25ம் திகதி Ivanov லண்டனுக்கு கொண்டுவரப்பட்டார். Ivanov-க்கு கத்தி கையளித்த Kusins அக்டோபர் 22ம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் Denis Ivanov மீது கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மார்ச் 28ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |