லண்டன் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? புகைப்படத்துடன் வெளியான தகவல்
தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் டியூப் ரயில் நிலையம் அருகே குத்தி கொலைசெய்யப்பட்ட இளைஞரின் புகைப்படம் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், பிரிக்ஸ்டன் நிலத்தடி குழாய் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் நடந்தது.
இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரை காப்பாற்ற, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சேவை முயற்சித்த போதிலும், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அப்போது அவரது விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அவரது பெயர் ஷேன் ஜெரோம் (Shane Jerome). 23 வயதாகும் அவர் சம்பவம் நடந்த இரவு ஒரு இசை விடியோவை தயாரித்துக்கொண்டிருந்தார்.
அவருடன் அவரது காதலி என்று சொல்லப்படும் பெண் உட்பட இன்னும் சிலர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஒருவர் ஜெரோமை கொலை செய்தாக கூறப்படுகிறது. அப்போது, தடுக்க முயன்ற அந்த பெண்ணுக்கு வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் கூட்டம் கூடியதால் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தில் லம்போர்கினி, ஃபெராரி மற்றும் ஒரு கருப்பு ரேஞ்ச் ரோவர் மற்றும் இரண்டு குவாட் பைக்குகள் உள்ளிட்ட பல உயர் ரக கார்கள் சம்பந்தப்பட்டதாக ஒரு சாட்சியாளர் தெரிவித்தார் .
பிரிக்ஸ்டனில் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்திருந்தனர், ஆனால் அவர் தற்போது எந்தவித வழக்குப்பதிவுவும் செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.