யாராவது உதவிக்கு வாங்க! பெற்றோர் சடலத்தை நாள் முழுவதும் வீட்டில் வைத்து கொண்டு அழுது கெஞ்சிய மகன்.. மனதை கலங்கடிக்கும் சம்பவம்
இந்தியாவில் கொரோனாவால் வீட்டில் பெற்றோர் இறந்த நிலையில் யாரும் உதவிக்கு வராததால் நாள் முழுவதும் அழுகி கொண்டிருந்த சடலத்துடன் மகன் கண்ணீருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தான் இந்த மனதை கலங்கடிக்கும் சம்பவம் நடந்துள்ளது.
லக்ஷ்மன் திவாரி என்ற நபரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் திவாரி மற்றும் அவர் பெற்றோருக்கும் கொரோனா உறுதியாகி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். உடன் திவாரியின் 4 வயது மகனு இருந்தான்.
இந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி மாலை 4 மணியளவில் திவாரியின் தாயார் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதன்பிறகு அடுத்த சில மணி நேரத்தில் அவரின் தந்தையும் உயிரிழந்தார். இதை தொடர்ந்து திவாரி தனது பெற்றோரின் சடலத்தை பார்த்தபடி அழுது கொண்டிருந்தார்.
அவரின் 4 வயது மகனும் தாத்தா, பாட்டியின் சடலத்தை பார்த்தபடி இருந்தான். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அக்கம்பக்கத்தினரிடம் சடலங்களை வெளியில் கொண்டு செல்வது தொடர்பாக திவாரி அழுது கொண்டே உதவி கேட்டுள்ளார்.
ஆனால் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை, ஏனெனில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் உதவ முன் வரவில்லை.
பின்னர் கொரோனா தன்னார்வலரான இர்டிசா குரேஷி (35) என்பவர் தகவல் அறிந்து திவாரி வீட்டுக்கு வந்தார்.
அவர் காவல் நிலையத்துக்கு சென்று கெஞ்சி கேட்டு உதவி கோரியும் பொலிசார் உதவவில்லை. திவாரி வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டரில் உடல்களை தகனம் செய்யும் சுடுகாடு இருந்த நிலையில் அருகில் இருந்த மருத்துவமனையின் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் என யாருமே உதவவில்லை.
ஒரு இடத்தில் ரூ 25,000 கொடுத்தால் ஆம்புலன்ஸ் தருவதாக கூறினார்கள், ஆனால் திவாரி குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததால் அதுவும் அவரால் தர முடியவில்லை.
இப்படி நாள் முழுவதும் இரண்டு சடலங்களும் வீட்டில் இருந்த நிலையில் அழுக தொடங்கி துர்நாற்றமும் வீச தொடங்கியது.
பின்னர் ஒருவழியாக குரேஷி அழைத்த ஒரு ஆம்புலன்ஸ் திவாரி பெற்றோர் சடலத்தை கொண்டு செல்ல ஒப்பு கொண்டு அங்கு வந்தது.
பின்னர் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டு முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
நான்கு வயது சிறுவன் தனது தாத்தா பாட்டிகளின் சடலங்களை ஏறக்குறைய ஒரு நாள் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும், அவனது தந்தை கெஞ்சி, அண்டை வீட்டாரிடம் உதவிக்காக மன்றாடியதை பார்க்கும் போதும் மனிதகுலத்தின் மீது கறை படித்துவிட்டது என நினைக்க தோன்றுகிறது.