காளிதேவியின் காலடியில் கிடந்த துண்டாக கிடந்த மனித தலை! கடும் அதிர்ச்சியில் மக்கள்
இந்தியாவில் காளிதேவியின் சிலை காலடியில் மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில், சாலையோரத்தில் இருக்கும் காளி தேவியின் சிலை காலடியில் துண்டிக்கப்பட்ட மனிதனின் தலை இருப்பது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொலை செய்யப்பட்டுள்ள நபரை அடையாளம் காண்பதற்கு, எட்டு குழுக்களை அமைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இது நரபலியாக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேவரகொண்டா துணை பொலிஸ் சூப்பிரண்டு ஆனந்த் ரெட்டி கூறுகையில், 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் வேறு இடத்தில் கொல்லப்பட்டு, அவரது தலையை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சிலையின் காலடியில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் .அந்த நபரின் உடலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமெரா காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருவதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலுள்ள சூர்யபேட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பம் பொலிசாரை தொடர்பு கொண்டு, அந்த நபரின் முக அம்சங்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய 30 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போல இருப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.