காதலுக்கு கடும் எதிர்ப்பு... தற்கொலை செய்த காதலர்களுக்கு குடும்பத்தாரின் விசித்திர செயல்
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் காதலுக்கு எழுந்த எதிர்ப்பால் தற்கொலை செய்து கொண்ட காதலர்களுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தின் ஜல்காவ் மாவட்டத்தில் வேட் கிராமத்திலேயே இந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. இருவரது ஆசையை நிறைவேற்றவே மரணத்திற்கு பின்னர் திருமணம் செய்து வைத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
22 வயதான முகேஷ் மற்றும் 19 வயதான நேஹா என்பவர்களே காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள்.
இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், தங்கள் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்க இருவரும் குடும்பத்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உடற்கூராய்வுக்கு பின்னர் உடல்களை கைப்பற்றிய குடும்பத்தினர், கல்லறையில் வைத்தே இருவருக்கும் திருமண சடங்குகளை முன்னெடுத்துள்ளனர். அதன் பின்னரே இருவரது சடலங்களுக்கும் இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர்.