எனது மகளை கோழையாக வளர்க்காதீங்க! குளிர்பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 30 வயது இளம்பெண்ணின் கடிதம்
தமிழகத்தில் கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குளிர்பிரதேசமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ரைபிள் ரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (40).
இவருடைய மனைவி சுமித்ரா(30). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுகுமார் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த சுமித்ரா மதிய வேளையில் திடீரென தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று காலையில் சுமித்ராவின் உறவினர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
பின்னர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அங்கு நின்றிருந்த சுகுமாரிடம், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உடனே பொலிசார் அவர்களை சமாதானம் செய்து, கலைந்து செல்ல கூறினர். மேலும் சுமித்ரா எழுதி வைத்த கடிதம் சிக்கி உள்ளதாகவும், அதில் ‘நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், தனது மகளை கோழையாக வளர்க்க வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனினும் அந்த கடிதத்தை தங்களிடம் காட்ட வேண்டும், பிரேத பரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். இதனால் சுமித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பின்னரே உறவினர்கள் கலைந்து சென்றனர்.
புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.