அச்சுறுத்தும் ஒமிக்ரான்.. பிரித்தானியாவில் வசிக்கும் மக்களுக்கு இனி இது கட்டாயம்!
இங்கிலாந்தில் நாளுக்கு நாள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வருகின்றது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்கள் கொரோனா வீரியம் குறைந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் உச்சம் அடைந்து வருகின்றது.
கொரோனாவை எதிர்க்கும் பேராயுதமாய் தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளின் முதன்மை நம்பிக்கையாய் இருந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய புது வகை வைரஸான ஒமிக்ரோன் உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றது.
குறிப்பாக இங்கிலாந்தில் தீவிரம் காட்டி வரும் வைரஸ் இதுவரை 14 பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து அங்கு கடைகளிலும், பஸ், ரெயில், மெட்ரோ ரெயில், விமானங்கள் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, இந்த புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவதால் புதிய வைரசை எதிர்கொள்வதற்கு அவகாசம் தரும். நமக்கு தெரிந்த வரையில் நமது தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களும் நமக்கு சிறந்த தற்காப்பாக அமையும்.
எனவே தகுதி வாய்ந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவை புதிய வைரஸ் பரவலை மந்தமாக்குவதுடன், நம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.