77,000 கிமீ வேகத்தில் பூமியை கடக்கும் விண்கல்., பூமிக்கு ஆபத்தா?
மிகப்பெரிய விண்கல்லொன்று சுமார் 77000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக NASA அறிவித்துள்ளது.
2014 TN17 என அழைக்கப்படும் ஒரு பாரிய விண்கல் பூமியை நோக்கி 77,282 கிமீ/மணிநேர வேகத்தில் பயணித்து வருகிறது.
இதன் அளவு சுமார் 165 மீட்டர் (ஏறக்குறைய இரண்டு தாஜ்மஹாலின் அகலம்) ஆகும்.
இந்த விண்கல் 2025 மார்ச் 26 அன்று இந்திய நேரம் மாலை 5:04 மணிக்கு பூமியை 5 மில்லியன் கிமீ (சுமார் 13 மடங்கு சந்திரனுக்கு அப்பால்) தொலைவில் கடந்து செல்லும்.
இப்போதைக்கு இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான விண்கல்
நாசா இதை "Potentially Hazardous Asteroid" (PHA) என வகைப்படுத்தியுள்ளது.
இதன் பாதை வேறு கிரகங்களின் ஈர்ப்புவிசை அல்லது விண்வெளித் தடங்கலால் மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் பூமியை தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
2014 TN17 என்பது அபொல்லோ விண்கல் குழுவில் (Apollo NEO) சேரும். இது பூமியின் பாதையை கடக்கும் ஆஸ்டராய்டுகளில் ஒன்று. இதுபோன்ற விண்கற்களை நாசா மற்றும் CNEOS போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
விண்கல் பூமியை தாக்கினால் என்ன ஆகும்?
அணுகுண்டு வெடிப்புகளுக்கு சமமான அழிவு ஏற்படும். அதிக அளவிலான தீப்பிழம்புகள் உருவாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் விளைவுகள் காணப்படும்.
1908-ஆம் ஆண்டு சைபீரியாவில் நடந்த "Tunguska" வெடிப்பு இதைவிட சிறிய விண்கல் காரணமாகவே ஏற்பட்டது, ஆனால் 2,000 சதுர கிமீ காட்டை அழித்தது.
2014 TN17 விரைவில் பூமியை பாதுகாப்பாக கடந்து செல்லும். ஆனால், இதுபோன்ற விண்கற்கள் எதிர்காலத்தில் பாதை மாற்றி ஆபத்து விளைவிக்கக் கூடும் என்பதால், அவற்றின் இயக்கங்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம் என நாசா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |