பிரித்தானியாவில் இன்னும் சில நாட்களுக்குள் கொரோனா பல மடங்கு அதிகரிக்கும்: எச்சரிக்கும் தொற்றுநோயியல் நிபுணர்
பிரித்தானியாவில் தற்போது கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ளதுபோல் தோன்றினாலும், இது தற்காலிகம்தான் என்று கூறும் தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர், இன்னும் சில நாட்களுக்குள் கொரோனா பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் இரண்டு மாதங்களில் முதன்முறையாக தினசரி கொரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த செய்தி, நாட்டில் சகஜ நிலை திரும்பும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.
ஆனால், East Anglia பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான Paul Hunter, வரும் நாட்களில் கொரோனா தொற்று பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார். இன்றைய நிலவரப்படி தொற்று 18 சதவிகிதம் குறைந்துள்ளது, வாராந்திர நிலவரத்தைப் பார்த்தாலும், அது கடந்த வாரத்தில் 43 சதவிகிதமாக இருந்தது, இன்று 24 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆனால், இம்மாதம் 19ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் தாக்கம் இப்போதைக்கு தெரியாது. மூன்று வாரங்கள் சென்ற பிறகுதான் அது தெரியவரும்.
ஆகவே, இது கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஒரு தற்காலிக வீழ்ச்சியாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன், கடந்த வாரம் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த வார இறுதியில், கொரோனா தொற்று பல மடங்கு அதிகரிக்கும் என கருதுகிறேன் என்கிறார் Paul Hunter.