குடிசை வீட்டில் வசித்தபடியே ரூ.357 கோடி மோசடி செய்த பெண்
குடிசை வீட்டில் வசிக்கும் பெண் வருமான வரித்துறையிடம் ரூ.357 கோடி மோசடி செய்துள்ளார்.
ரூ.357 கோடி மோசடி செய்த பெண்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த நான்சி அகர்வால் என்ற பெண், 225 சதுரடி குடிசை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
முன்னதாக சிறிய நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய அவர், வருமான வரித்துறையின் விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் 357 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி வரி விலக்குகளை நான்சி உருவாக்கியதை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு கோர தனிநபர்களை அனுமதிக்கும் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80GGC-ஐ பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தியுள்ளார்.
தனது வாடிக்கையாளர்கள் சார்பாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்குப் பெரிய நன்கொடைகளைப் போலியாக உருவாக்கியுள்ளார். அதன் பின்னர் இந்த போலி நன்கொடைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தகுதி பெறாத வரி விலக்குகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
3,000 வாடிக்கையாளர்கள்
இவ்வாறாக நாடு முழுவதும் சுமார் 3,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.65.5 கோடி அளவிலான போலி வருமான வரி ரீஃபண்டை பெற்றுக்கொடுத்துள்ளார்.
பெரும்பாலும் சம்பளம் பெறும் நபர்களைத் தகுதியற்ற வரி விலக்குகளைப் பெறத் தூண்டிய அவர், புதிய வடிக்கையாளர்களை அழைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கி தனது வாடிக்கையாளர் வட்டாரத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.5 லட்சம் ரொக்கமும், ரூ. 4 கோடி மதிப்புள்ள பிக்சட் டெபாசிட்டுகளும் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக விரிவான விசாரணையை தொடங்கியுள்ள வருமான வரித்துறையினர், வருமான வரி ரீஃபண்டை பெற்ற நான்சியின் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |