தேனிலவு கொலை வழக்கு: நடித்துக் காட்டிய மணமகள்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத் தம்பதி மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்ற நிலையில், மணமகனை அவரது மனைவியே ஆள் வைத்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த கொலை சம்பவத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடித்துக் காட்டியுள்ளார்கள்.
தேனிலவு கொலை வழக்கு
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போன ராஜா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ராஜா கொலை தொடர்பாக அவரது மனைவியான சோனம், சோனமுடைய காதலர் என கருதப்படும் ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார், ஆகாஷ் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
நடித்துக் காட்டிய குற்றவாளிகள்
இந்நிலையில், விசாரணையின் ஒரு பகுதியாக, மேகாலயா பொலிசார், சம்பவம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அங்கு, ராஜாவை எப்படி கொலை செய்தார்கள் என்பதை குற்றவாளிகள் நடித்துக் காட்டியுள்ளார்கள்.
அவர்களுடைய கூற்றுப்படி, ராஜாவின் மனைவியான சோனம் அவர் முன்னால் நிற்க, ராஜாவின் பின்னால் நின்றுகொண்டிருந்த விஷால் முதலில் ராஜாவை பட்டாக்கத்தியால் வெட்டியிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து குமாரும், அவருக்குப் பின் தாக்கூரும் ராஜாவை வெட்டி, அவரது உடலை பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார்கள்.
இந்த நடித்துக் காட்டும் நிகழ்வின்போது வழக்கில் இன்னொரு விடயமும் தெரியவந்துள்ளது.
அதாவது, ராஜாவைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு பட்டாக்கத்தி ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் இரண்டாவது பட்டாக்கத்தியை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
அதை எங்கே வீசினார்கள் என குற்றவாளிகள் காட்டியதைத் தொடர்ந்து, ராஜாவைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரண்டாவது ஆயுதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |