மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.
இளவரசர் ஹரியை பொருத்தமட்டில், பிரித்தானியாவுக்கான பயணம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என அறிந்து கொண்ட நிலையிலேயே, மேகன் மெர்க்கல் தொடர்ந்து ஹரியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
9 நாட்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹரி, நேற்று லண்டனில் இருந்து கலிபோர்னியா திரும்பியுள்ளார். இந்த 9 நாட்களில் ஒரே ஒருமுறை மட்டுமே, தந்தை சார்லசுடனும் சகோதரர் வில்லியமுடனும் தனிப்பட்டமுறையில் ஹரி பேசியுள்ளார்.
அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே அமைந்தது என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனாலையே, பேசித்தீர்க்க வேண்டியவை, துவக்க கட்டத்திலேயே நீடிப்பதாக அரண்மனை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கியிருந்த 9 நாட்களும், நிறைமாத கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் தமது கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
தமது மகன் ஆர்ச்சி மற்றும் மேகனை இந்த நிலையில் தனியாக விட்டுவர ஹரி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனாலையே, தாங்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக, மேகன் தினசரி தமது கணவருக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஹரி- மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியிருக்க தொடங்கிய நாள் முதலே, ராணியாரும் இளவரசர் பிலிப்பும் அடிக்கடி நேரலையில் பேசிக்கொள்வதாக இளவரசர் ஹரியே முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
அரண்மனைக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவர் தெரிவிக்கையில், கடந்த ஓராண்டு காலம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு கடினமான ஒன்று எனவும்,
அதன் தொடர்ச்சியாக தமது 99ம் வயதில் ஏப்ரல் 9ம் திகதி இளவரசர் பிலிப் காலமானார் எனவும், இதனால் மனக்கசப்பில் இருக்கும் சொந்தங்கள் ஒன்றாக சேர வாய்ப்பு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்கா திரும்பியுள்ள ஹரி 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளார்.