டயானா சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக ஹரியின் மனைவி மேகன் பிரித்தானியா வருகிறாரா இல்லையா?: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
மறைந்த இளவரசி டயானா நினைவாக, ஜூலை 1ஆம் திகதி, பிரித்தானியாவில் அவரது சிலை ஒன்றை அவரது மகன்கள் வில்லியமும் ஹரியும் திறந்துவைக்க உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஹரியுடன் மேகனும் வருவதாக அமெரிக்க இணையதளம் ஒன்று தெரிவித்திருந்தது.
பிரித்தானியாவிலிருந்து வெளியேறிய பிறகு, தனது தாத்தாவின் இறுதிச்சடங்குக்காக முதன்முறையாக இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பியபோது, அவரை யாரும் சரியாக கண்டுகொள்ளாத விடயம் அவரை வருந்தச் செய்தது.
ஆகவே, இரண்டாவது முறையாக ஹரி தனது தாயின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக பிரித்தானியா வரும்போது, அவருக்கு ஆதரவாக அவருடன் நிற்பதற்காக ஹரியுடன் அவரது மனைவி மேகனும் பிரித்தானியா வருவதாக, மேகனுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாக அந்த இணையதளம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்த கூற்று உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி மேகனுக்கு நெருக்கமான ஒருவர் Daily Mirror பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், மேகன் இப்போதுதான் குழந்தை பெற்றிருக்கிறார். ஆகவே, அவர் பயணம் செய்யப்போவதில்லை.
ஹரி மட்டுமே பிரித்தானியாவுக்கு செல்ல இருக்கிறார் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜூலை மாதம் 1ஆம் திகதி, இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில், அவரது மகன்களான இளவரசர் ஹரியும் அவரது அண்ணன் இளவரசர் வில்லியமும் இணைந்து, அவரது உருவச் சிலையை திறந்து வைக்க இருக்கிறார்கள். அந்த சிலை, கென்சிங்டன் மாளிகையில் இளவரசி டயானாவுக்கு மிகவும் விருப்பமான ஒரு இடத்தில் நிறுவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.