இலங்கை வீரர்கள் மூன்று பேர் விளையாட தடை! ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த இலங்கை கிரிக்கெட்: எதற்காக தெரியுமா?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது, இலங்கை அணி வீரர்களான Kusal Mendis, Niroshan Dickwella மற்றும் Danushka Gunathilaka ஆகியோர், வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா பயோ பபுள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்க தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 3 வீரர்களுக்கு சம்மன் அனுப்பிய 5 பேர் கொண்ட குழு, நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டது.
விசாரணை மேற்கொண்ட 5 பேர் கொண்ட குழு, இலங்கை கிரிக்கெட்டிற்கு Danushka Gunathilaka மற்றும் Kusal Mendis-க்கு 2 ஆண்டுகளும், Niroshan Dickwella-வுக்கு 18 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதிக்கும் படியும், அதுமட்டுமின்றி மூன்று பேருக்கும் 25,000 டொலர் அபராதம் விதிக்கும் படியும் பரிந்துரைத்ததாக செய்தி வெளியானது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் இந்த மூன்று பேர் விவகாரத்தில் அதிரடி முடிவெடுத்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விதிமுறைகள் மீறி நடந்து கொண்ட மூன்று வீரர்களுக்கும் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒரு வருட தடை விதிப்பதுடன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 6 மாத தடையும் விதித்துள்ளது. மேலும், ஒவ்வொரு வீரர்களுக்கும் அபராதத் தொகையாக ஒரு கோடி ரூபாய் விதித்துள்ளது.
You May Like This Video