மகாராணியாரை சந்திக்க பிரித்தானியா செல்கிறார் ஏஞ்சலா மெர்க்கல்... சந்திப்புக்கான காரணம் என்ன?
பிரித்தானிய மகாராணியாரையும், பிரதமரையும் சந்திப்பதற்காக பிரித்தானியா செல்கிறார், ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல். யூரோ கால்பந்து போட்டியில் ஜேர்மனி இங்கிலாந்திடம் தோற்றுப்போன நிலையில் ஏஞ்சலா பிரித்தானியாவுக்குச் செல்வதால், தயவு செய்து கால்பந்து குறித்து மட்டும் பேசிக்கொள்ளாதீர்கள் என பத்திரிகைகள் வேடிக்கையாக செய்தி வெளியிட்டுள்ளன.
சரி, விடயத்துக்கு வருவோம். ஏஞ்சலா தனது சேன்ஸலர் பதவியிலிருந்து ஓய்வுபெற உள்ள நிலையில், பல்வேறு தலைவர்களிடமும் பிரியாவிடைபெற்று வருகிறார். ஆனால், பிரித்தானிய மகாராணியாருடனான அவரது சந்திப்பின் நோக்கம் விடைபெறுவதற்காகவா என்பது தெரியவில்லை.
முதலில் பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சனை அவரது இல்லத்தில் ஏஞ்சலா சந்திக்க இருக்கும் நிலையில், இருவரும் சில முக்கிய விடயங்கள் குறித்து பேச இருக்கிறார்கள்.
அவர்களது சந்திப்பின்போது, பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செல்லும்போது, தனிமைப்படுத்தல் இல்லாமலே அவர்களை அனுமதிக்கவேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கை குறித்து பிரித்தானியா தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்படலாம்.
அடுத்ததாக, இங்கிலாந்தில் யூரோ கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், Wembley விளையாட்டு மைதானத்தில் அதிகம் பார்வையாளர்கள் கூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ஏஞ்சலா.
இவை இரண்டின் பின்னணியிலுமே இருப்பது டெல்டா வகை கொரோனா வைரஸ்தான். அதாவது, பிரித்தானியர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் சுற்றுலாவுக்கு அனுமதிப்பதும், கால்பந்து மைதானத்தில் அதிகமானோரை அனுமதிப்பதும் டெல்டா வைரஸ் பரவ வழிவகுக்கும் என ஏஞ்சலா அஞ்சுகிறார்.
அடுத்ததாக, இங்கிலாந்திலிருந்து வட அயர்லாந்துக்கு குளிரூட்டப்பட்ட இறைச்சி அனுப்புவதிலும் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் பிரச்சினை உள்ளது. இவை குறித்தே ஏஞ்சலாவும், போரிஸ் ஜான்சனும் விவாதிக்க இருப்பதாக கருதப்படுகிறது.
போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பைத் தொடர்ந்து, விண்ட்சர் மாளிகையில் பிரித்தானிய மகாராணியாரை சந்திக்க இருக்கிறார் ஏஞ்சலா.