2015 அகதிகள் பிரச்சினையால் பதவியை இழக்கும் நிலைக்கு ஆளான ஜேர்மன் சேன்ஸலர்: ஆப்கன் புலம்பெயர்வோர் குறித்த கருத்து
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடந்ததால் 2015ஆம் ஆண்டு அங்கிருந்து ஏராளமான அகதிகள் பல்வேறு நாடுகளை நோக்கி உயிர் தப்ப ஓடினர்.
அப்படி உயிருக்கு பயந்து ஓடியவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு புகலிடம் கொடுத்தவர் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.
அப்போது பெருமளவில் ஏஞ்சலா மெர்க்கல் புகழப்பட்டாலும், பின்னர் அகதிகள் பிரச்சினையே அவரது பதவிக்கு உலை வைக்கும் அளவுக்கு பெரிதானது. அகதிகளை ஏற்றுக்கொள்வதற்காக தன் நாட்டை அவர் திறந்துவிட்டபோது, தங்களிடமும் ஒரு வார்த்தை கேட்டிருந்திருக்கவேண்டும் என சில ஐரோப்பிய தலைவர்கள் முறுமுறுத்தார்கள்.
ஒரு கட்டத்தில், எதிர்ப்புகள் காரணமாக வெறுத்துப்போய், இனி சேன்ஸலர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் அளிப்பது குறித்த ஒரு பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் ஜனாதிபதி, தங்கள் நாட்டுக்குள் ஆப்கானிஸ்தானியர்கள் நுழைய முற்படலாம். ஆகவே, கவனமாக இருக்கவேண்டும், அதற்காக திட்டம் தீட்டவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஏஞ்சலா மெர்க்கலும் பழைய சம்பவங்களை மறக்கவில்லை என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அதிகம் பாதிப்புக்குள்ளக்கூடிய நிலையிலிருப்பவர்களை, ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மீட்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
அதேபோல், ஏஞ்சலாவுக்கு அடுத்து சேன்ஸலர் பதவிக்கான போட்டியிலிருக்கும் Armin Laschetம், மீண்டும் 2015 நிலைமை திரும்பக்கூடாது என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.