வர்த்தக விவகாரங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஜேர்மனி முடிவு
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜேர்மனி, எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்காவைப் போலவே அதிக தலைமைப் பங்கை ஏற்கத் தயாராக இருப்பதாக சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பை வலுப்படுத்த
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என்றும் வர்த்தக விடயங்கள் மற்றும் பிற பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் ஜேர்மன் வாகன உற்பத்தியாளர்களால் இயக்கப்படும் தொழிற்சாலைகள் தொடர்பில் தாம் எடுத்துரைத்ததாகவும் மெர்ஸ் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, வர்த்தகக் கொள்கையை வகுக்கும் பொறுப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இருப்பதாகவும், ஜேர்மனியின் ஏற்றுமதியின் அளவைக் கருத்தில் கொண்டு, அது ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றும் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற வர்த்தக பங்காளிகள் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டவும், அதிக வரிகளைத் தவிர்க்கவும் ஜூலை 9 ஆம் திகதியை ட்ரம்ப் காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளார்.
50% வரை உயரக்கூடும்
இந்த நிலையில் பாரிஸில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் விரைவாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்தனர்.
ஐரோப்பா ஏற்கனவே எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 50% வரியையும், கார் இறக்குமதிக்கு 25% வரியையும் எதிர்கொள்கிறது. எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதிகளுக்கான வரிகள் 10% இலிருந்து 50% வரை உயரக்கூடும்.
ஜேர்மன் வாகன உற்பத்தியாளர்கள் அமெரிக்காவில் சுமார் 400,000 வாகனங்களை உற்பத்தி செய்ததாகவும், இது ஜேர்மனியில் உற்பத்தியாகும் அதே எண்ணிக்கை என்றும், அவற்றில் சில பின்னர் ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் மெர்ஸ் ட்ரம்பிடம் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |