மெட்டா ஏஐயின் "கிளவுட் பிராசஸிங்" அம்சம்: பேஸ்புக் பயனர்களுக்கு தனியுரிமை அச்சுறுத்தல்!
மெட்டா நிறுவனம், அதன் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களின் தனியுரிமை தொடர்பான விவகாரங்களில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மெட்டா ஏஐ (Meta AI) எனப்படும் அதன் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய "கிளவுட் பிராசஸிங் (Cloud Processing)" அம்சம், பயனர்கள் மற்றும் தனியுரிமை ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் போன்களில் உள்ள புகைப்படங்களை அணுக மெட்டா ஏஐ-க்கு அனுமதி அளித்தால், அந்தப் படங்களை 'கிளவுட் பிராசஸிங்' என்ற பெயரில் ஸ்கேன் செய்து கிளவுடில் சேமித்துக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெட்டா தனது ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க பயனர்களின் தரவைப் பயன்படுத்துகிறது என்ற ஏற்கனவே உள்ள விவாதங்களுக்கு மத்தியில் இந்த புதிய அம்சம் வெளியாகியுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள தரவுகள் ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சமீபத்திய தகவல், தொழில்நுட்ப செய்திகளை வெளியிடும் 'டெக் கிரன்ச்' செய்தி நிறுவனத்தால் முதலில் வெளிவந்துள்ளது.
அதில், சில ஃபேஸ்புக் பயனர்கள் ஸ்டோரி பதிவேற்ற முயன்றபோது, ஒரு 'பாப் அப்' நோட்டிஃபிகேஷன் வந்ததாகவும், அதில் 'கிளவுட் பிராசஸிங்' அம்சத்திற்கு மெட்டா பயனர்களை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்களின் போனில் உள்ள புகைப்படங்கள் தானாகவே, குறிப்பிட்ட இடைவெளியில், மெட்டாவின் கிளவுட் ஸ்டோரேஜில் பதிவேற்றப்படும்.
பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கான ஏஐ அடிப்படையிலான ஃபில்டர்கள், போட்டோ கொலாஜ்கள் போன்ற கிரியேட்டிவ் ஐடியாக்களை மெட்டா ஏஐ இதன்மூலம் வழங்கும் என மெட்டா கூறுகிறது.
இது பாதுகாப்பானது என்று பயனர்களிடம் கூறப்பட்டாலும், பயனர்கள் பதிவேற்றாத படங்களையும் மெட்டா ஏஐ அணுகும் என்பது குறிப்பிடத்தக்க தனியுரிமைச் சிக்கலாகும். இந்த அம்சத்தை இயக்குவது பயனர்களின் விருப்பம் என்றும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதை முடக்கலாம் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |