இந்த பெண்ணைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்... பிரித்தானிய நாடாளுமன்றத்தை குலுங்கவைத்த உளவுத்துறையின் எச்சரிக்கை
சீனப்பெண் ஒருவரைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய உளவுத்துறை அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ள விடயம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்புடைய நன்கொடையாளரான சீனப் பெண் ஒருவர், சீன உளவாளி என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நேற்று நாடாளுமன்றமே அதிர்ந்துள்ளது.
Christine Lee (58) என்ற சீனப்பெண், பல்வேறு பிரித்தானிய அரசியல்வாதிகளுடன் நிற்கும் புகைப்படங்களை சர்வசாதாரணமாக காணலாம்.
சீன பிரித்தானிய உறவை வலுப்படுத்துவதற்காக என்று கூறி, தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் Christine Lee, லண்டன் அலுவலகம் ஒன்றில் சட்ட ஆலோசகராக பணியாற்றிவருகிறார்.
லண்டனிலுள்ள சீன தூதரகத்தின் சட்ட ஆலோசகராகவும் கடல்கடந்த சீன விவகாரங்கள் அலுவலகத்தின் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
பிரித்தானிய முன்னாள் பிரதமரான தெரஸா மே Christine Leeயின் ’சேவையை’ பாராட்டி அவருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
டோனி பிளேர் பிரித்தானிய பிரதமராக இருக்கும்போதே Lee பிரித்தானிய அரசியலில் தலையை நுழைத்திருக்கிறார்.
லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Barry Gardinerஉடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட அவர், 500,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக Gardinerக்கு நன்கொடையும் வழங்கியிருக்கிறார்.
இப்படி மெதுவாக அரசியலுக்குள் நுழைந்து பிரபலமான Christine Lee குறித்து தற்போது ஒரு பயங்கர செய்தியை பிரித்தானிய உள்நாட்டு உளவு ஏஜன்சியான MI5 பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது.
அந்த செய்தியில், சீன அரசின் உளவாளியான ஒருவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பணியாற்றி வருகிறார்.
அவர் நமது செயல்பாடுகளைக் குலைப்பதற்காக இரகசியமாக செயல்பட்டு வருகிறார், ஆகவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருக்கவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிப்படையாக ஒருவர் பிரித்தானிய அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்துள்ள விடயம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை செயலரான பிரீத்தி பட்டேலும், வெளிநாட்டு ஊடுருவலை அடையாளம் காண பிரித்தானியா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், Christine Lee கைது செய்யப்படவோ, நாட்டிலிருந்து வெளியேற்றப்படவோ இல்லை, ஆனால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை மெமோ ஒன்று மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.