இனி தேவையின்றி தலையிடாது... உலக நாடுகளுக்கு ஜோ பைடன் உறுதி
இனிமேல் எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் 76-வது பொது அவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேவையற்ற போர்களில் இனி அமெரிக்கா ஈடுபடாது என்றார்.
உலகத்தின் முன்பு தற்போதுள்ள சவால்களுக்கு போர்கள் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தன்னையும் தனது கூட்டாளிகளையும் காப்பாற்ற வேண்டிய தேவையிருந்தால் போரை கடைசி ஆயுதமாகத்தான் அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என்ற ஜோ பைடன், அமைதிக்காக எந்த நாட்டுடன் இணைந்து செயல்படவும் தயார் என அறிவித்துள்ளார். கொரோனா போன்ற பெருந்தொற்றை வெடிகுண்டுகள் மூலம் தடுக்க முடியாது என்றும் அரசியல் மற்றும் அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சியே தேவை என்றும் பைடன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அதிகரிக்கப்படும் என்றும் பைடன் உறுதி அளித்துள்ளார்.
மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு 160 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்பியுள்ளதாகவும் கொரோனா பரவலை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு 15 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அனுப்பியுள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.