உலக பணக்காரர்கள் குடியேற விரும்பும் நாடு - இந்தியாவில் இருந்தும் வெளியேறும் 3500 மில்லியனர்கள்
உலகளவில் மில்லியனர்கள் அதிக குடியேற விரும்பும் நாடுகள் குறித்து பார்க்கலாம்.
மில்லியனர்களின் இடம்பெயர்வு
சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ், 2025 ஆம் ஆண்டுக்கான தனியார் செல்வ இடம்பெயர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒரு மில்லியன் டொலருக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள HNWI(High Net Worth Individual) என்பவர்களின் இடம்பெயர்வுகள் குறித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், சர்வதேச அளவில் இந்த ஆண்டு 142,000 மில்லியனர்களும், 2026 ஆம் ஆண்டில் 165,000 மில்லியனர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வார்கள் என்று கணித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து, 16,500 மில்லியனர்கள் வெளியேற உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 7,800 HNWI வெளியேற்றத்துடன் சீனா 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து 3500 HNWI க்களும், தென்கொரியாவில் இருந்து 2,300 HNWI க்களும் வெளியேற உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதே போல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியில் இருந்து, 800, 500 மற்றும் 400 HNWI வெளியேற உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம்
மேலும், அதிக HNWI க்களை ஈர்க்கும் நாட்டில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது.
9800 HNWI க்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேற விரும்புகிறார்கள். கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 6,700 ஆக இருந்தது.
7,500 HNWI க்கள் அமெரிக்காவில் குடியேற விரும்புவதால், அந்த நாடு 2வது இடத்தில் உள்ளது. இத்தாலி(3,600), சுவிட்சர்லாந்து(3,000) மற்றும் சவுதி அரேபியா(2,400) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
வரவேற்கத்தக்க குடியேற்றக் கொள்கை, பூஜ்ஜிய வருமான வரி, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகிய காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகம் HNWகளின் விருப்பமான நாடாக உள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |