இந்தியாவில் பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தப் போவதில்லை - நிர்மலா சீதாராமன்
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தொற்று பரவ ஆரம்பித்ததால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உடனே மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக முழு ஊரடங்கை பிறப்பித்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூக்காக்கள் என அனைத்து மூடப்பட்டன.
சில மாதங்களுக்கு பிறகு படிப்படியாக கொரோனாவின் தொற்று குறைந்து வந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்தன. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 1,84,372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பதிவாகியிருக்கிறது. 1027 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு மாதத்திற்கு பிறகு, கொரோனா தொற்றால் மீண்டும் ஒரே நாளில் உயிரிழப்பு ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நகரங்களில் ஊரடங்குகளும், தட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் குறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் டேவிட் மால்ப்பஸுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். அதில், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக கடனை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா 2-வது அலைப் பரவலை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை நிதியமைச்சர் பட்டியலிட்டார். சோதனை, தடமறிதல், சிகிச்சையளித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றையும் குறிப்பிட்டார்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. மேலும், பொருளாதாரம் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. உள்ளூர் அளவில் சில கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்கவுள்ளோம் என்றார்.