பாரீஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஜேர்மன் இளம்பெண்... தான் யார் என்பதையே மறந்த மர்மம்
ஜேர்மனியில் வீட்டிலிருந்தவண்ணம் ஒன்லைன் வகுப்பில் பங்கேற்றிருந்த ஒரு மாணவி திடீரென மாயமானார். Celle என்ற ஜேர்மன் நகரத்தில் வாழும் இசபெல்லா என்னும் அந்த 16 வயது இளம்பெண் காணாமல் போகும்போது, அவரது பெற்றோர் வீட்டிலில்லை, அவர்கள் அலுவலகத்திலிருந்திருக்கிறார்கள்.
பிறகுதான் மகள் காணாமல் போன விடயம் தெரியவர, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மார்ச் மாதம் 22ஆம் திகதி நடந்துள்ளது. ஜேர்மன் பொலிசார் இசபெல்லாவை மோப்ப நாய்கள் உதவியுடன் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜேர்மனியில், பொலிஸ் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் ஒருவர் கண்ணில், பேஸ்புக்கில் வெளியான ஒரு செய்தி பட்டிருக்கிறது.
அதில், பிரான்சில் ஒரு இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் யார் என பொலிசார் தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்திருக்கிறது.
அந்த புகைப்படம் இசபெல்லாவுடையதைப் போல் இருக்கவே, உடனே ஜேர்மன் பொலிசார் பிரான்ஸ் பொலிசாரைத் தொடர்புகொள்ள, அது இசபெல்லாதான் என்பது தெரியவந்துள்ளது.
நடந்தது என்னவென்றால், தான் என்ன செய்கிறோம் எங்கு செல்கிறோம் என்பது தெரியாமலே சென்று கொண்டிருந்த இசபெல்லா, திடீரென தான் பிரான்சில் இருப்பதை உணர்ந்து அருகிலுள்ளவர்களிடம் உதவி கோரியிருக்கிறார்.
பொலிசார் வந்து அவரை விசாரிக்க, அவருக்கு தான் யார், தன் பெயர் என்ன என எந்த விடயமுமே நினைவில் இல்லாததால், அவரை அரசு காப்பகத்தில் வைத்திருந்திருக்கிறார்கள்.
ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட இசபெல்லாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கின் தாக்கத்தால் தனது படிப்பு பாதிக்கப்பட்டதால்தான் மகளுக்கு இப்படி ஆகிவிட்டது என்கிறார் இசபெல்லாவின் தந்தை.
பொலிசாரை பொருத்தவரை, காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாள், இப்போதைக்கு அவர்கள் வேலை முடிந்துவிட்டது.
இசபெல்லாவுக்கு நினைவு திரும்பி, தன்னை யாரோ கடத்திக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிட்டார்கள் என்பது போல ஏதாவது சொன்னால் மட்டுமே இனி அவர்கள் மீண்டும் வழக்கை கையில் எடுப்பார்கள்! ஆக, ஜேர்மனியைச் சேர்ந்த இசபெல்லா, பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம், மர்மமாகவே நீடிக்கிறது.