தேம்ஸ் நதியில் விழுந்த பள்ளி மாணவன்: ஒரு வாரத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சோகம்
லண்டனில் ஒரு வாரத்திற்கு முன் தேம்ஸ் நதியில் தவறி விழுந்த 13 வயது பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது குடுத்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் லண்டன் பெருநகர மாடவட்டமான சவுத்வார்க்கில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஆர்க் குளோப் அகாதமி பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், கடந்த ஏப்ரல் 20-ஆம் திகதி சீருடைகளுடன் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது டவர் பாலத்திலிருந்து தவறி தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார். விழுந்தது யார் என்பது தெரியாமல் லண்டன் பொலிஸார் ஒரு மிஸ்ஸிங் கேஸை பதிவு செய்தனர்.
அதே நாளில், சிறுவனின் பள்ளி முதல்வர் குறித்த மாணவன் இன்று காலை பள்ளிக்கு வந்து சேரவில்லை என புகார் அளித்ததையடுத்து, ஆற்றில் விழுந்தது பள்ளி மாணவனாக இருக்கலாம் பொலிஸார் முடிவுக்கு வந்தனர்.
சிறுவன் ஆற்றில் விழுந்தபோது அவரை காப்பாற்ற ஒரு பெண் நதியில் குதித்ததாகவும், ஆனால் அவரால் சிறுவனின் ஸ்கூல் ஜாக்கெட் மற்றும் புத்தக பையை மட்டுமே மீட்கமுடிந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மற்றும் படகுகளைக் கொண்டு மாணவனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். ஆனால் சிறுவன் கடந்த ஒரு வாரமாக கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை (ஏப்ரல் 28) பிற்பகல் Rotherhithe சுரங்கம் அருகே ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல் சிறுவனின் உடல் தான் என பொலிஸார் உறுதி செய்யவில்லை. ஆனால் அது 13 வயது பள்ளி மாணவனாகவே இருக்கக்கூடும் என பொலிஸார் நம்புகின்றனர்.
அதனைத் தொடர்ந்து உடல் மீட்கப்பட்டது குறித்து சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக லண்டன் நகர பொலிஸார் கூறியுள்ளனர்.
காலை பள்ளிக்கு சென்ற 13 வயது மாணவன், 8 நாட்கள் கழித்தது அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.