என் தம்பி தமிழக முதலமைச்சராவதில் பெருமை! மு.க ஸ்டாலினுக்கு மு.க அழகிரி திடீர் வாழ்த்து
மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு அவரின் மூத்த சகோதரர் மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க ஸ்டாலினுக்கும், மு.க அழகிரிக்கும் என்றும் ஏழாம் பொருத்தம் என கூறினால் அது மிகையாகாது.
திமுகவில் இருந்து கருணாந்தி உயிருடன் இருந்த போதே அழகிரி நீக்கப்பட்டார். இது தொடர்பாக கருணாநிதி அப்போது செய்திகாளர்களிடம் கூறுகையில், அன்றைய தினம் அதிகாலை ஸ்டாலினைப் பற்றிப் புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார்.
நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார்.
ஸ்டாலின் இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடம் சொன்னார்.
எந்தத் தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியுமா. கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன் எனத் தழுதழுத்த குரலில் கருணாநிதி கூறியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னரும் தி.மு.க.வை விமர்சிக்க அழகிரி தயங்கவில்லை. கட்சிக்கு எதிராக அவர் பேசியதும், நடந்துகொண்டதும் தொடர, 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் திகதி தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்
இதன் பின்னர் கட்சியில் அவர் சேர்த்து கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் மதுரையில் பேசிய அழகிரி, ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக வர முடியாது.
என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள் வருங்கால முதல்வரே என போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவரால் முதல்வராக நிச்சயமாக முடியாது என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தான் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்து மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
ஸ்டாலினுக்கு இதுவரை வாழ்த்து சொல்லாமல் இருந்த அழகிரி தற்போது மெளனம் கலைத்துள்ளார்.
அதன்படி, என் தம்பி முதலமைச்சராவதில் பெருமை என கூறியுள்ளார்.
மேலும் முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.